தமிழக செய்திகள்

அனைவருக்கும் தேசிய விண்வெளி தின நல்வாழ்த்துகள்! - நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 23 அன்று ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

சென்னை,

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தேசிய விண்வெளி தினம்

இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நயினார் நாகேந்திரன் வாழ்த்து

விண்மீன்களை ரசித்த தலைமுறையிலிருந்து, விண்வெளியை ஆராய்ந்து உலகையே வியக்க வைக்கும் தலைமுறையாக நம் பாரத தேசம் உயர்ந்து நிற்கிறது! நம் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அறிவின் மீதான தாகமும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய சிறகுகளை அளித்து வருகின்றன.

சந்திரனைத் தொட்ட சந்திரயான் முதல் சூரியனை நோக்கிய ஆதித்யா-L1 வரை, ஒவ்வொரு சாதனையும் இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், கனவுகளின் உயரத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.