சென்னை,
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10ம் தேதி) காலமானார். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார். கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழ்த் திரைத்துறைக்கு சூரியனாக இருந்தவர் மறைந்துள்ளார். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. பாரதிராஜாவை அரசு மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும்” என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.