தமிழக செய்திகள்

கயத்தாறு அருகே பைக் விபத்து... சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு!

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ்குமார் (40), கடந்த மே 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.