சென்னை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் கூறியிருப்பதாவது;- தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்த பாஜக ஒன்றிய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையைத் திடுமென உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த மக்கள்விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
பெட்ரோல்-டீசல் ஆகியற்றின் விலையை லிட்டருக்கு 3.00ருபாய் என உயர்த்தியிருப்பதன் மூலம் பாஜக அரசு எளிய மக்களின் அடிவயிற்றில் கை வைத்துள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் பக்க விளைவுகளாக அனைத்து இன்றியமையாத அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் விலைவாசியும் வெகுவாக உயரும். இதனல் மிகவும் பாதிக்கப்பட போவது விளிம்புநிலையைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்கும் மக்களே ஆவர். எனவே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெறவேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.