சென்னை,
தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5 பக்க ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாகவும் தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து இதுபற்றி விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி பாஜக தலைமை அழைப்பு விடுத்தது. இதனையடுத்து திருவனந்தபுரம் வழியாக நயினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழக பாஜக மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து அண்ணாமலை பல விஷயங்களைப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றியும் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு பற்றியும் நயினார் நாகேந்திரனிடம் பாஜக தலைமை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை சமர்பித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அண்ணாமலைக்கு என்று ஒரு தனிப்பட்ட இளைஞர் படையும், தீவிரமான ஆதரவாளர் வட்டமும் உருவாகியுள்ளது. அவர் முற்றிலும் கட்சியை விட்டு வெளியேறினால், அது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் எனத் தேசியத் தலைமை அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரைத் தொடர்ந்து கட்சியிலேயே தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, தேசிய அளவில் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு முன்னரே அண்ணாமலைக்கு தேசிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் பரவியது. ஆனால் எந்த விதமான பதவியும் வழங்கப்படவில்லை.
அண்ணாமலையின் இந்த பிடிவாதமான முடிவைத் தொடர்ந்து, தற்போதைய தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அமித்ஷா முன்னிலையில் இரு தரப்பையும் அமர வைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பாரா அல்லது டெல்லியின் சமாதானத் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டுவாரா? என்பது இன்னும் 24 மணி நேரத்தில் தெளிவாகத் தெரிந்துவிடும்.