தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய, திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் அண்ணாநகர் 7-வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய் அன்னராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலாபுஷ்பா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக வில்லிசைப் பாடகி ஜெயலலிதா, திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் வில்லிசைப் பாடல் கச்சேரி நடத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தேன்மொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஜமுனா, வடக்கு மண்டல தலைவி சுதா, ஆன்மிக பிரிவு மாவட்ட துணை தலைவி உஷாதேவி, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இணை செயலாளர் தங்கத்தாய் பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ஓம்சக்தி பிரபு, ஓ.பி.சி அணி பொதுச் செயலாளர் வன்னியராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்ட துணை தலைவர் ரஞ்சனா நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT