ஈரோடு,
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (55 வயது). இவர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். வட்டார வளர்ச்சி அதிகாரியால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட இந்த பணிக்கு தினக்கூலியாக ரூ.762 பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையில் மாதந்தோறும் ஊதியம் பெறவும், பணியில் தொடர்ந்து நீடிக்கவும் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரி லதா கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் கடந்த 1½ ஆண்டுகளாக சண்முகசுந்தரம், தான் வாங்கிய சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்தை, வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாதத்துக்கான ஊதியம் சண்முகசுந்தரத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்துக்கான லஞ்சம் ரூ.10 ஆயிரத்தை வழங்குமாறு லதா கேட்டுள்ளார். ஆனால் நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலால், லஞ்ச பணம் கொடுப்பதற்கு விரும்பாத சண்முகசுந்தரம் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர், சண்முகசுந்தரத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து சண்முகசுந்தரம் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளை வட்டார வளர்ச்சி அதிகாரி லதாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.