சென்னை,
சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பெங்குயின் வேர்ல்ட்வைட் நிறுவனம், சோனியா காந்தியின் வரவிருக்கும் புத்தகத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல், உலகம் முழுவதும் அதன் அசல் வடிவிலேயே வெளியிடத் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவில் அதை வெளியிடுவதற்கு Penguin Random House India சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது.
உலகம் முழுவதும் அசல் வடிவில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்தை இந்தியாவில் மட்டும் அப்படியே வெளியிட முடியாத அளவுக்கு என்ன காரணம்? அல்லது எந்த அழுத்தம் அவர்களைத் தடுக்கிறது?
சோனியா காந்தியின் வாழ்க்கை தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் நாட்டிற்காக ஆற்றிய பணியின் தூய்மையும் கண்ணியமும் போற்றத்தக்கது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க, மூத்த அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தையே படுகொலை செய்வதற்கு ஒப்பானது.
உண்மையான பிரச்சினை என்னவென்றால், மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகளை மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான பகுதிகளை புத்தகத்திலிருந்து நீக்குமாறு Penguin India மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்த உண்மையை இந்திய மக்களிடமிருந்து ஏன் மறைக்க வேண்டும்? அழுத்தத்தின் பேரில் உண்மைகளை மாற்றுமாறு பதிப்பகங்களையும் மோடி அரசு நிர்பந்திக்குமா? இந்தியாவில் அச்சிடப்படும் ஒரு புத்தகத்தில் உண்மையை எழுதுவதற்குக்கூட அனுமதி பெற வேண்டிய நிலை ஏன் உருவாக வேண்டும்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.