சேலம்,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் ஒரு வாலிபரின் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையொன்று துர்நாற்றத்துடன் மிதந்தது. மீனவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மேச்சேரி போலீசார் அந்த மூட்டையை மீட்டு பிரித்தபோது அதில் வாலிபர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக இருந்தது தெரியவந்தது. யாரோ அவரை கொலை செய்து ஆற்றில் வீசியிருப்பதும் தெரியவந்தது.
அந்த உடலை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையானவர் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.