தஞ்சாவூர்,
தஞ்சை அருகே வீட்டில் இருந்து மாயமான பிளஸ்-2 மாணவி, வயலில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகள் மகேஸ்வரி (17). அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாணவி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சீதாலட்சுமி, பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெண்டயம்பட்டி பகுதியில் ஒரு வயலில் உள்ள கிணற்றில் பெண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர். மாயமான மாணவியின் பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பிணமாக மீட்கப்பட்டது மகேஸ்வரியின் உடல்தான் என்பதை உறுதி செய்தனர்.
மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.