தமிழக செய்திகள்

தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தேனாம்பேட்டையில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்திற்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், போலீசார் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் திரிஷா, சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக இன்று மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் மெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

டிஜிபி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் வந்த நிலையில், உடனடியாக வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்திற்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், போலீசார் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், இமெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.