தமிழக செய்திகள்

புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன முக்கிய தகவல்

நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறப்போகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை கொரட்டூரில் பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கதைகளின் வழியே கணிதம்

படிக்கும் காலத்தில் கணிதம் வராமல் அதிகமாக அடி வாங்கி உள்ளேன். கடினமான கணிதம் இனி கதைகளின் வழியே எளிமையாக கற்பிக்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், கலை என அனைத்தும் ஒருங்கிணைந்த Steam Education கற்பிக்கப்படும். குழந்தைகளை மையப்படுத்தி கல்வியாக மாற்றி அமைக்கப்படும். அனைவருக்குமான கல்வியாக இருக்கும்.

கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். குழந்தைகளுக்கான கல்வியாக தமிழ்நாடு கல்வி முறையை மாற்ற இருக்கிறோம்.அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதத்தை இணைத்து புதிய கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

புத்தக சுமை குறைகிறது

தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்னை அமெரிக்கா அனுப்பி பலவற்றை ஆய்வு செய்து வரச் சொன்னார். அங்கே முழுக்க STEM எஜுகேஷன்தான். STEM எஜுகேஷன் என்பது Science, Technology, Engineering & Mathematics

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய், STEM எஜுகேஷனில் இருந்து STEAM எஜுகேஷன் என்ற அப்ரோச் நோக்கி நகர்றோம். இது என்ன STEAM எஜுகேஷன்? S-T-E-A-M, அதாவது Science, Technology, Engineering உடன் Arts கலையையும் சேர்த்து Mathematics சேர்க்கிறோம்"

ஸ்டீம் கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. பள்ளிகளில் ப்ராம்பட் இன்ஜினீரிங் கற்றுத்தரப்படும்.

ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பள்ளிகளில் கற்றுத்தரப்படும். இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம்.மாணவர்களின் புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும்; பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.

எல்லாம் மாறுது.. கல்வியும் மாறுது

எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும்.

நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார்; அதனைவிட பள்ளி மாணவர்கள் அதிகம் சுமக்கின்றனர்.

முன்பு நிலாவைக் காட்டி சோறூட்டிக் கொண்டிருந்தோம். இன்று நிலாவிற்கே சந்திராயனை ஓட்டிவிட்டார்கள். முன்பு வாசலில் தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வார்கள். இன்று ஷாப்பிங் மால்களில் தள்ளுவண்டியை (ட்ராலி) நம்ம கையில கொடுத்துட்டாங்க. உணவு பழக்கவழக்கம் மாறிவிட்டது. நடையுடை பாவனை மாறிவிட்டது. எல்லாம் மாறிவிட்டது. காலம் மாறிவிட்டது. இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது.

பெற்றோரை மதிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம்

மாணவர்களின் மனச்சுமையை குறைக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகம். புத்தகங்கள் இனி படங்கள் நிறைந்ததாக இருக்கும். புத்தக சுமை குறையும்போது மனச்சுமையும் குறையும்.பெற்றோரை மதிக்கும் கல்வியாக புதிய பாடத்திட்டம் அமையும்

இவ்வாறு அவர் கூறினார்.