தமிழக செய்திகள்

திண்டுக்கல் லியோனி பிரசார வாகனம் மீது பாட்டில் வீச்சு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது.

திருச்சி,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் தி.மு.க. அரசு பெண்களுக்கு வழங்கிய மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூட்டத்துக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் பாட்டிலை வீசினார். அந்த பாட்டில் திண்டுக்கல் லியோனி நின்று பேசிக் கொண்டிருந்த பிரசார வாகனத்தின் முன் பகுதியில் பட்டு சிதறியது. இதில் அவருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க. நிர்வாகிகள் பாட்டில் வீசிய நபர் யார்? என்று தேடினார்கள். ஆனால் கூட்டத்தில் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. இது குறித்து பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.