விருதுநகர்:
விருதுநகரில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜுனத் அகமது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 சிறுவர்களும், விருதுநகர் சிறார் நீதிமன்ற குழுவால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 4 சிறுவர்களில் 15 வயது சிறுவன் ஒருவன் போக்சோ நீதிமன்றத்திற்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிகரன் மூலம் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் எங்கள் 4 பேரையும் அந்தப்பெண் வெவ்வேறு நாட்களில் வீடு மற்றும் மருந்து கிட்டங்கிக்கு வரசொன்னார்.
அப்போது அவரது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காட்டினார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 மாதங்கள் தொடர்ந்து அவர் எங்களை தவறாக வழிநடத்தினார்.
மேலும் இது தொடர்பாக வெளியே தெரிவித்தால் எங்கள் எதிர்காலம் பிரச்சினையாகி விடும் என்று மிரட்டினார். இதுதொடர்பாக எங்களை விசாரித்த போலீசாரிடம் தெரிவித்தோம். அந்தப்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்யுமாறும் போலீஸ் அதிகாரியிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை.
மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவித்தும் அவர்களும் பிரச்சினை பெரிதாகி விட்டதால் இதுபற்றி ஒன்றும் செய்ய முடியாது என்றும், எங்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்போவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தில் எங்களை அடைத்தனர்.
போலீசாரின் நடவடிக்கைகளால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனவே எங்களை தவறாக வழிநடத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அந்த பெண் கடந்த ஓராண்டுக்கு மேலாக யார், யாரிடம் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்தால் தெரிய வரும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.