சென்னை,
சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் 3 வயது சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட ரோப் திடீரென அறுந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது தகடு பலமாக விழுந்தது.
இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மகன் மீது இரும்பு தகடு விழுந்ததை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த நிலையில், உயிரிழந்த 3 வயது சிறுவனின் தந்தை அளித்த புகாரில் திட்ட மேலாளர் முத்துகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜே.சி.பி.ஆபரேட்டர் ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.