கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விபத்தில் காதலன் உயிரிழப்பு: துக்கத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

விபத்தில் காதலன் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கேத்தி பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6-ந்தேதி தனது நண்பருடன் மது குடித்துவிட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கேத்தி அடுத்த சாந்தூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வாலிபரும், அவரது நண்பரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அந்த வாலிபரை ஊட்டியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து வந்தார். விபத்தில் வாலிபர் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் சகோதரர் வெளியூர் சென்று விட்டார். அவரது தாய் கேரட் அறுவடை வேலைக்கு தோட்டத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி, காதலனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.