மலைப்பாம்பு 
தமிழக செய்திகள்

6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த வாலிபர் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைப்பு

பொதுமக்கள் அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு பத்திரமாக கட்டினர்.

தக்கலை,

தக்கலை அருகே கால்வாயில் மிதந்த 6 அடி நீள மலைப்பாம்பை வாலிபர் ஒருவர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த துணிச்சலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்வாயில் மிதந்த மலைப்பாம்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூவங்காபறம்பு வழியாக திருவிதாங்கோடு கிளை கால்வாய் செல்கிறது. நேற்று மாலை இந்த கால்வாய் கரையின் உடைந்த பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று தனது தலையை நுழைத்துக்கொண்டு, உடல் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த ஜெரோம் என்பவர், கால்வாயில் மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால், மலைப்பாம்பை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

வாலிபர் துணிச்சல்

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து தண்ணீருக்குள் சென்று மறைந்துவிடும் என்று பொதுமக்கள் கருதினர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென கால்வாயில் இறங்கினார்.

அவர் தண்ணீரில் கிடந்த 6 அடி நீள மலைப்பாம்பை நெஞ்சுரத்துடன் லாவகமாக பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். வாலிபரின் இந்த துணிச்சலான செயலை கண்டு அங்கிருந்தவர்கள் பாராட்டும் அதே வேளையில் அதிர்ச்சியும் அடைந்தனர்.

வனத்துறையிடம் ஒப்படைப்பு

இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு பத்திரமாக கட்டினர். பின்னர் சித்திரங்கோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள வன அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மலைப்பாம்பை மீட்ட வாலிபரால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.