முதல்-அமைச்சர் விஜய்  
தமிழக செய்திகள்

காலை உணவு திட்ட விரிவாக்கம்: திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

காலை உணவு திட்டத்திற்காக, நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழக அரசு கூடுதலாக ரூ. 217.63 கோடியை ஒதுக்கியுள்ளது.

சென்னை,

காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

காமராஜர் காலை உணவு திட்டம்

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பசியை போக்கி, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

திருவான்மியூர்

காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதல்-அமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

இந்த காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

15 லட்சம் மாணவர்கள் பயன்

இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கூடுதலாக பயனடைவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழக அரசு கூடுதலாக ரூ. 217.63 கோடி நிதியை வழங்கியுள்ளது.

வரவேற்பு

இதன் மூலம் ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றி பாடம் படிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் இந்த முயற்சி, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT