தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மதுபாட்டிலால் தாக்கி கொத்தனார் கொடூர கொலை

தூத்துக்குடி அருகே நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் மதுபாட்டிலால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் மதுபாட்டிலால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

கொத்தனாரை மதுபாட்டிலால் தாக்கிய 3 பேர்

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கே.சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கணேஷ்குமார் (வயது 28), கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 14-ம் தேதி இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கணேஷ்குமாரை மதுபாட்டிலால் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கொத்தனார் உயிரிழப்பு

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT