தமிழக செய்திகள்

அகல ரெயில்பாதை திட்டம்: தேனி-எருமேலி இடையே ஆய்வு பணிக்கு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேனியை கடந்து சபரிமலைக்கு செல்கின்றன.

தேனி,

திண்டுக்கல்-சபரிமலை அகல ரெயில் பாதை திட்டத்தில், தேனியில் இருந்து எருமேலி வரை 95 கி.மீ. தூரம் பூர்வாங்க பணிகளுக்கான ஆய்வு மேற்கொள்ள ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

திண்டுக்கல்-சபரிமலை ரெயில்பாதை

திண்டுக்கல்லில் இருந்து தேனி வழியாக சபரிமலைக்கு அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் தேனி வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கார்த் திகை, மார்கழி மாதங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேனியை கடந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

எனவே, திண்டுக்கல்-சபரிமலை இடையே அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். இந்த திட்டத்தை ஒரே கட்டமாக நிறைவேற்ற தாமதம் ஏற்படும் என்றால் திண்டுக்கல்-லோயர்கேம்ப், லோயர்கேம்ப்-சபரிமலை என 2 கட்டமாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசும் இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது.

ஆய்வு பணிக்கு ஒப்புதல்

இந்தநிலையில் திண்டுக்கல்-சபரிமலை அகல ரெயில்பாதை திட்டத்தில் முதற்கட்டமாக தேனி முதல் கேரளம் மாநிலம் எருமேலி வரை அகல ரெயில் பாதை அமைக்க பூர்வாங்க பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை தொடங்க இந்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "அய்யப்ப பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திண்டுக்கல்-சபரிமலை இடையே ரெயில் பாதை அமைக்க நாடாளுமன்றத்தில் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து தற்போது இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக தேனி முதல் எருமேலி வரை சுமார் 95 கிலோ மீட்ட ருக்கான அகல ரெயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளுக்கு ஆய்வு மேற்கொள்ள ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.