தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பள்ளிகொண்டா அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த ஒதியத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கொம்பலாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி (வயது 62). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வருகிறார். காட்பாடி பாரதிநகரில் வசித்து வரும் அக்கா கஸ்தூரியை பார்ப்பதற்காக கோடீஸ்வரி 5-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

கோடீஸ்வரி வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமளா என்பவர் கோடீஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டிருந்தது. அலமாரியில் வைத்திருந்த 7 பவுன் நகை, பீரோவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோடீஸ்வரி பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதேபோன்று மங்களம் பகுதியில் தாமோதரன், ஜெயராமன் ஆகியோரது வீட்டின் பூட்டை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். 

SCROLL FOR NEXT