சென்னை,
இறந்துபோன தனது தங்கையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக, தங்கையின் எலும்புக்கூட்டை அண்ணன் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
ஒடிசாவிலிருந்து வரும் இந்தக் செய்தி அதிர்ச்சியூட்டுவது மட்டுமல்ல.. நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் ஆட்சியில் நமது வங்கி அமைப்பு எவ்வளவு ஆழமாகச் சிதைந்துவிட்டது என்பதையும் இது அம்பலப்படுத்துகிறது.
தன் சகோதரியின் மரணத்தை நிரூபித்து, அவருக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக, ஒருவர் தனது சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டுவரும் அளவுக்கு நிர்பந்திக்கப்படுகிறான். எந்த வகையான அமைப்பு இந்த அளவிலான கொடூரத்தைக் கோருகிறது? இது மனிதாபிமானமற்ற செயல்.
கடந்த பல ஆண்டுகளாக, வங்கிகள் பணக்காரர்களுக்கான சுலபமான பாதைகளாக மாறிவிட்டன. பெரும் கடன்களைத் தள்ளுபடி செய்வது. விதிகளை வளைப்பது, மற்றும் அதிக கடன் வைத்திருப்போரை கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவை. ஆனால் சாதாரண குடிமக்களுக்கு? முடிவில்லாத ஆவணப் பணிகள், சந்தேகம், அவமானம், இப்போது இந்த பயங்கரமான சோதனையும் கூட.
நிதி மந்திரி இந்த சம்பவத்துக்கு நடவடிக்கை எடுப்பாரா? இதற்குப் பொறுப்பான பொது மேலாளரை அவர் இடைநீக்கம் செய்வாரா? இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு வங்கி மேலாளர் பொறுப்பேற்க வைக்கப்படுவாரா? அல்லது வழக்கம் போல் மௌனம் நிலவுமா? பொறுப்பேற்பு என்பது பாரபட்சமாக இருக்க முடியாது. செல்வந்தர்களுக்காக மலைகளைக்கூட நகர்த்தக்கூடிய இந்த அமைப்பு, ஏழைகளை குறைந்தபட்சம் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இது வெறும் வங்கியின் தோல்வி மட்டுமல்ல. இது நிர்வாகத்தின் தோல்வி.”
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.