தமிழக செய்திகள்

அடிக்கடி செல்போனில் பேசிய அக்கா... கண்டித்தும் கேட்காததால் வெட்டிக் கொன்ற தம்பி

தனியாக சென்று செல்போனில் நீண்ட நேரமாக பேசக்கூடாது என்று அக்காவை தம்பி கண்டித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை அருகே சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23 வயது) என்ற மகளும், ராகுல் (22 வயது), முத்து கிருஷ்ணன் (20 வயது) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி, நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். ராகுல், கோவையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். முத்துகிருஷ்ணன், நாங்குநேரி பகுதியில் உள்ள ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

முத்துகிருஷ்ணன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அக்காள் ராமலட்சுமியிடம், "அடிக்கடி தனியாக சென்று செல்போனில் நீண்ட நேரமாக பேசக்கூடாது" என்று கூறி கண்டித்து வந்தார். ஆனாலும் ராமலட்சுமி அதனை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே சுத்தமல்லி பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவுக்காக முத்துகிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் வைக்க சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமி செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியைக் கண்டித்தார். எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் ராமலட்சுமி, "நான் செல்போனில் அப்படித்தான் பேசுவேன்" என்று கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.