தமிழக செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை - தமிழக அரசு

பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசி பயன்படுத்தி வருவதாக பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

சென்னை,

ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.

பேருந்து இயக்கத்தின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகிப்படுத்தகூடாது என மேற்காணும் பார்வையில் கண்ட சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் கைபேசி வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி வருவதாகவும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஓட்டுனர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது உயிர் இழப்பு மற்றும் பெரிய விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஓட்டுனர்கள் பணியின் போது கைபேசியை சட்டைப்பையில் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது

மேலும் பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின் போது ஓட்டுனர்கள் கைபேசி வைத்திருப்பது பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஓட்டுனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றறிக்கை வாயிலாக மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.