சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டதையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இதன்மூலம், மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.இதனிடையே, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.மேலும், கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்து வந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இடைத்தேர்தல் நடத்த 5 தொகுதிகளுக்கு தடை இருப்பதால்,, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2 தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
நாளை பொதுத்துறை, சட்டமன்றம், ஆளுநர் - அமைச்சரவை மற்றும் ஓய்வூதியத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால் நாளை முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அறிவிப்புகள் வெளியிட முடியாது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது; பிற மாவட்டங்களில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் அல்லது சலுகைகள், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கவரும் வகையில் இருக்கக்கூடாது. மாநிலம் முழுமைக்குமான ஒரு பெரிய புதிய கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டால் இடைத்தேர்தல் தொகுதியையும் பாதிக்கும் என்பதால், அதுபோன்ற பெரிய அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அல்லது தேர்தல் முடியும் வரை தள்ளி வைக்க வேண்டியிருக்குமாம். அதே நேரத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களாக இருந்தால் அதை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.
இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்ல முடியாது. ஆங்காங்கே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெறும்.