சூளகிரி,
சூளகிரி அருகே விவசாயி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலை கண்டித்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொன்றது அம்பலமானது. இதுதொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது40). விவசாயி. இவர் கடந்த மாதம் 25-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சூளகிரியில் இருந்து குண்டு குறுக்கி நோக்கி சென்றார். பவர் கிரீட் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ரூபா சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு ' பதிவு செய்து விசாரணை நடத்தினர். விவசாயி ராஜகோபால், விபத்தில் சாகவில்லை, கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாக சிலர் போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ராஜகோபால் இரும்பு கம்பியால் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராஜகோபால்-ரூபா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ரூபா. குண்டுகுறுக்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒட்டையனூரை சேர்ந்த நந்தகுமார் (34) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராஜகோபால் மனைவியை கண்டித்துள்ளார்.
கடந்த 25-ந்தேதி இரவு உடல் நிலை சரியில்லாத மனைவியை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார் பின்னர் அவரை வீட்டில் இறக்கிவிட்டு, உணவு வாங்க மீண்டும் ராஜகோபால் வெளியே வந்தார். இந்த தகவலை, ரூபா கள்ளக்காதலன் நந்தகுமாருக்கு தெரிவித்தார்.
2 பேர் கைது
இதையடுத்து. அவர் ராஜகோபாலை பின்தொடர்ந்து வந்து பவர் கிரீடு அருகே வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு நந்தகுமார், ரூபா ஆகிய இருவரும் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அனைத்து உண்மையும் வெளியே வந்துவிட்டது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து நந்தகுமார் கொலைக்கு உடந்தையாக இருந்த ரூபா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நந்தகுமாருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கைதான ரூபாவும் நந்த குமாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் தவித்து வருகின்றனர். அதிலும் ராஜகோபால் கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் ரூபா சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்களது 2 குழந்தைகள் ஆதரவின்றி பரிதாப நிலையில் உள்ளனர். அவர்களை தற்போது குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.
கள்ளக்காதல் விவகாரம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.