தமிழக செய்திகள்

சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்

சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்பது தவறான தகவல் என்று நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி,

சுங்கச்சாவடிகளின் அருகே வசிப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் கட்டணமின்றி வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

உள்ளூர் மாதாந்திர பாஸ்

சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்பது தவறான தகவலாகும். சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதற்காக 'உள்ளூர் மாதாந்திர பாஸ்' (Local Monthly Pass) முறை நடைமுறையில் உள்ளது.

குறிப்பிட்ட அந்தச் சுங்கச்சாவடிக்கு உரிய விதிகளின்படி முறைப்படி விண்ணப்பித்து இந்த மாதாந்திர பாஸை பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, வெறுமனே அடையாள அட்டையைக் காட்டி இலவசமாகச் செல்ல முடியாது என்றும், சலுகையைப் பெற விரும்புவோர் அந்தந்தச் சுங்கச்சாவடியின் விதிமுறைகளைப் பின்பற்றி மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.