தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? - ஆ.ராசா கேள்வி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து என்னவென்றே தெரியாமல் கூட்டத்தை கூட்டுவது கேலிக்கூத்து என ஆ.ராசா கூறியுள்ளார்.

பெரம்பலூர்,

தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? என திமுக எம்.பி. ஆ ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆனால் திடீரென தவெக அரசு தரப்பில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டி உள்ளார்.இந்தக் கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை மொத்தமுள்ள 57 தமிழ்நாடு எம்.பி.க்களில் 37 பேர் புறக்கணித்துள்ளன.

திமுக, தேமுதிக, மநீம, அதிமுக, பாமக கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விசிக, சிபிஐ, உள்ளிட்ட கட்சிகளின்19 எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். காங்., எம்.பி.சுதாவும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், திமுக எம்பி ஆ.ராசாவிடம் பெரம்பலூரில் செய்தியாளர்கள், தவெகவின் அனைத்து எம்பிக்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் இல்லாத கட்சி கூட கூட்டத்தை நடத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா.. என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார். ஆ.ராசாவின் இந்த பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.