தமிழக செய்திகள்

என்னை விமர்சிப்பவர்களால் முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேள்வி கேட்க முடியுமா? திருமாவளவன் ஆவேசம்

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளை என விஜய்யை கூறினீர்களே, தற்போது அவருடன் எப்படி கூட்டணிக்கு சென்றீர்கள் என சிலர் கேள்வி கேட்கிறார்கள்.

சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் நேற்று தங்களை விடுதலை சிறுத் தைகள் கட்சியின் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருமாவ ளவன் பேசியதாவது:-தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதில் விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பு மகத்தானது.

திருமாவளவன் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி கேட்பதாக சொல்கின்றனர் எங்களிடம் இருப்பது 2 சீட்டு. அதைவைத்து இதையெல்லாம் கேட்கமுடியுமா? இப்போது நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?. சிலர் வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் என்னென்னவோ பேசுகிறார்கள். நான் சொல்லிதான் டி.ஜி.பி., லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நியமித்ததாக கூறுகிறார்கள். எல்லாம் தவறான தகவல்.

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளை என விஜய்யை கூறினீர்களே, தற்போது அவருடன் எப்படி கூட்டணிக்கு சென்றீர்கள் என சிலர் கேள்வி கேட்கிறார்கள். இதே கேள்வியை, உங்களை விமர்சித்தவரிடம் நீங்கள் ஏன் ஆதரவு கேட்கிறீர்கள் என முதல்-அமைச்சர் விஜய்யிடம் யாரும் கேட்கவில்லை. தி.மு.க.வை தீய சக்தி என கூறிவிட்டு, எப்படி முன்னாள் முதல்-அமைச்சர் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றீர்கள் என விஜய்யிடமோ அல்லது தி.மு.க.வை தீய சக்தி என்றவரை நீங்கள் ஏன் வரவேற்றீர்கள் என மு.க.ஸ்டாலினிடமோ யாராவது கேட்டீர்களா? இப்படி சொல்வதால், முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவன் கருத்து சொல்லிவிட்டார் என மக்களை குழப்பிவிடுவார்கள். சமூக ஊடகங்களில் நம்மை விமர்சிக்கும் தி.மு.க., ம.தி.மு.க.வினரை நீங்கள் யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். என்மீதான நம்பிக்கையை சிதைக்க முயற்சி நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.