சென்னை,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ. 27.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ.27.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று(06.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்படி பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 4-வது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீட்டர் நீளம் மற்றும் 14.40 மீட்டர் அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், 1-வது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீட்டர் நீளம் மற்றும் 13 மீட்டர் அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195க்குட்பட்ட தலைமைச் செயலக அலுவலர் குடியிருப்புப் பகுதியில் ரூ.12.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலம் மற்றும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டல அலுவலர் சி.திருநாவுக்கரசு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.