சென்னை,
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.
இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, உரிமைக்குழுவின் நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என, இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இவ்வழக்கு, தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் புதிய நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தவிட்டுள்ளது.