தமிழக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதில் துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்காக தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநக கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரது உடைமையில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.