சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. ரீசாட்-2பிஆர்1 என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது.
இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி பலர் பதிவு செய்து உள்ளனர்.
இந்த கேலரி, ஏவுதளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பார்வையாளர்களால் ஏவுதளத்தை பார்வையிட முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.