சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ள வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மணிகண்டன் சிறுவர்களுக்கு மிட்டாய் மற்றும் பிஸ்கெட் வாங்கி கொடுத்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், துண்டு பிரசுரங்கள் வழங்கவும், கொடி, தோரணங்கள் கட்டவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் மனைவி தென்றல் (32) என்பவர், தனது மகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களை தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் உதவியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணிகண்டன், அரவிந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.