தமிழக செய்திகள்

2013-ல் சிறுவனை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு - தொழிலதிபர் குற்றவாளி என சென்னை கோர்ட்டு தீர்ப்பு

சிறுவன் உயிரிழந்த வழக்கில் தொழிலதிபரை குற்றவாளி என சென்னை கூடுதல் அமர்வு கோர்ட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு தொழிலதிபர் ஷாஜி என்பவர் சென்னை பாந்தியன் சாலையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இந்த விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த சமயத்தில் காரை ஓட்டிச் சென்ற ஷாஜி மது போதையில் இருந்தார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஷாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீண்ட வருடங்களாக சென்னை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து, ஷாஜி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை குற்றவாளி என்றும் சென்னை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஷாஜியை வரும்15-ந்தேதி நேரில் ஆஜர்படுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.