தமிழக செய்திகள்

8 வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கு: தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்கள் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்தது

8 வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கு: தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்கள் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்தது நீதிபதிகள் உத்தரவு.

மதுரை,

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக உள்ளூர் திட்டக்குழும விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மத்தி தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு நகரமைப்பு மற்றும் ஊரக திட்டமிடல் சட்டம் 1971-ல் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. அதாவது, பொது பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, பொதுமக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான சட்டத்திருத்தம் செய்துள்ளது. குறிப்பாக, பொதுபயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களிடமும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமும் ஆலோசனை கேட்க வேண்டும் என்ற விதியை திருத்தியுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது. இந்த சட்ட திருத்தத்தால், நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது.

தனிநபர் சொத்துரிமை, வாழ்வுரிமை ஆகிய அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கு எதிராக சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த சட்டத்திருத்தத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த சட்டத்திருத்தத்தின் படி, தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்கள், கட்டிடங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதிதீர்ப்பை பொறுத்தது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.