தமிழக செய்திகள்

ரியல் எஸ்டேட் தொழிலில் ரூ.8 லட்சம் மோசடி: கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு

காரணங்களை கூறிய விஜயகுமார் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம். இது குறித்து ஆரோக்கிய லெவே போலீசில் புகார் செய்தார்.

காரைக்குடி,

காரைக்குடி மானகிரி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய லெவே (வயது 42). இவரிடம் காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்த விஜயகுமார்(40) ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால், நல்ல லாபம் ஈட்டி தருகிறேன் என்று கூறினாராம். இதையொட்டி கடந்த 2020-ம் ஆண்டு ஆரோக்கிய லெவே விஜயகுமாரிடம் ரூ.10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

அதன் பிறகு விஜயகுமார் அவருக்கு எவ்வித பங்குத்தொகையும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆரோக்கியலெவே தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ஏதேதோ காரணங்களை கூறிய விஜயகுமார் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம். இது குறித்து ஆரோக்கிய லெவே போலீசில் புகார் செய்தார்.

போலீசார் தலையீட்டின் பேரில் விஜயகுமார் முதற்கட்டமாக ரூ.2 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு மீதம் ரூ.8 லட்சத்தை கொடுக்கவில்லை எனக்கூறி ஆரோக்கியலெவே காரைக்குடி கோர்ட்டில் புகார் மனு அளித்தார்.

கோர்ட்டு உத்தரவின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார், விஜயகுமார் அவரது மனைவி சுபா(38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.