மதுரை,
சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது.
தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழக அரசு சார்பில் முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியது 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தவிர்த்து மத்திய அரசுக்கு மாற்று வழியில்லை என டெல்லி கூட்டத்தில் அரசு எடுத்து கூறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என டெல்லி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர்.
காவிரி நீரை ஆதாரமாக கொண்ட விவசாயிகளின் நலனை பேணி பாதுகாக்க ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மதுரையில் கருங்காலக்குடியில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, தமிழக பட்ஜெட்டில் மக்களின் முன்னேற்றம், அரசின் முன்னேற்றம் இடம் பெற்றிருக்கும். தமிழக பட்ஜெட்டில் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்து ஷரத்துகளும் உறுதியாக இருக்கும் என்று கூறினார்.