சென்னை,
காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாளை (28.08.2026) காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் டெல்டா மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக நடைபெறுகிறது.
1. காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
2. தேவையான தண்ணீர் காவிரி நதியில் வராத காரணத்தால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
3. விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும்.
4. விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
5. டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே, அதை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கிடவேண்டும்.
திருவாரூர்- மு.வீரபாண்டியன், வை.செல்வராஜ் எம்.பி., க.மாரிமுத்து எம்.எல்.ஏ., எஸ். கேசவராஜ்.
நாகப்பட்டினம்- ரா.முத்தரசன், சிவகுரு, பாண்டியன்.
தஞ்சாவூர்- பி.எஸ்.மாசிலாமணி, மு.அ.பாரதி, கோ.சக்திவேல்.
மயிலாடுதுறை- வை.சிவபுண்ணியம் முன்னாள் எம்.எல்.ஏ., கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ., அ.சீனிவாசன்.
கடலூர்- டி.எம்.மூர்த்தி, பி.துரை.
திருச்சி- பி.பத்மாவதி முன்னாள் எம்.எல்.ஏ., எம்.செல்வராஜ், எஸ்.சிவா, செ.ராஜ்குமார்.
புதுக்கோட்டை- அ.பாஸ்கர், முத்து உத்திராபதி, த.செங்கோடன்.
இந்த முற்றுகைப் போராட்டங்களுக்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.