தமிழக செய்திகள்

சிவசங்கர் பாபாவை சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. திட்டம்

சிவசங்கர் பாபாவை நேரடியாக சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16-ந் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் (ஜூலை 1-ந் தேதி வரை) காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவரை நேரடியாக கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக அவர் முன்னிலையிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இன்று அல்லது நாளை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.