நீலகிரி,
ஆண்டுதோறும் அக்டோபர் 15-ந்தேதி ஊட்டி மலை ரெயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1908-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து தேயிலை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் பயணிகள் ரெயிலாக மாற்றப்பட்டது.
இந்த ரெயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊட்டி மலை ரெயிலின் 115-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஊட்டி ரெயில் நிலையத்தில் மலை ரெயிலை இயக்கி வந்த ஓட்டுனர் மற்றும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தோடு மலை ரெயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.