சென்னை,
இன்றைய தினம் Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளன.
இந்தக் காலகட்டத்தில், 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி, இந்தப் பணியானது மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை, அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அனைத்துமே, 'டிஜிட்டல்' முறையில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, மக்கள் அனைவரும் தங்கள் சுயவிபரங்கள் அனைத்தையும், 'ஆன்லைன் வாயிலாக தாமாகவே பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இந்தநிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.