தமிழக செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கு தனிப் பிரிவு வேண்டும் - பிரதமருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம்

ஓ.பி.சி. (OBC) பிரிவினருக்குத் தனிப் பிரிவு மறுக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தனிப் பிரிவு வேண்டும்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC/SEBC) தெளிவான தனிப் பிரிவு உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டும்!

​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரஸும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதி வாரிக் கணக்கெடுப்பின் முதன்மை நோக்கமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டி, அனைவருக்குமான உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Development) சாத்தியப்படுத்துவதுதான்.

உரிய திருத்தம் செய்க

​தற்போது வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தில் OBC பிரிவினருக்குத் தனிப் பிரிவு மறுக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களின் துல்லியமான எண்ணிக்கையும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையும் வெளிவந்தால் மட்டுமே அவர்களின் உரிமைகளும் நலத்திட்டங்களும் முழுமையாகச் சென்றடையும்.

​தெலங்கானா மாநில அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கணக்கெடுப்பு மாதிரியைப் பின்பற்றி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரியும் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.