சென்னை,
கும்மிடிப்பூண்டி - கூடூர் ரெயில் பாதை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தின் ரெயில்வே உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே 3-வது மற்றும் 4-வது ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சுமார் ரூ.2,229 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு சரக்குப் போக்குவரத்தையும் விரைவுபடுத்தும். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.