தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவையான பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இதனை சரிசெய்வதற்கான எந்தவொரு தெளிவான திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதனால் எரிவாயு உருளை தட்டுப்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேசி முடிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுவிட்டது. இன்னும் ஓரிரு கட்சிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதுவும் மிக விரைவில் சுமுகமாக முடிவடையும்.
அ.தி.மு.க. என்பது பாஜகவின் 'பி-டீம்' என்று தி.மு.க. நீண்ட நாட்களாகவே கூறி வருகிறது. இங்கு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்று அவர்கள் சொன்னாலும், திரைமறைவில் பா.ஜ.க. தலைமையில்தான் அந்தக் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் மாணவி கொலை வழக்கு குறித்து பேசுகையில், "அந்தத் துயரமான சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குச் சட்டப்படி உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.