சென்னையில் நடந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை மத்திய மாவட்ட ரோட்டரி கிளப், இன்னர்வீல் கிளப்புகள் மற்றும் சிங்கப்பெண் சிறப்புப்படை 'இணைந்து 'சிங்கப்பெண் மாரத்தான்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தின. இந்த மாரத்தான் ஓட்டத்தை சிங்கப்பெண் சிறப்புப் படை ஐ.ஜி. பவானீஸ்வரி ஒலிம்பிக் தீபம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டமானது சிறுமிகளுக்கு (12 வயதுக்கு உட்பட்டவர்கள்) தீவுத் திடலில் இருந்து கடற்கரை சாலையில் கண்ணகி சிலை வரை சென்று மீண்டும் தீவுத்திடலை வந்த டைதல் (4 கிலோ மீட்டர்). பெரியவர்களுக்கு தீவுத் திடலில் தொடங்கி போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் திரும்பி வந்து தீவுத்திடலை வந்து அடையும் (8 கிலோ மீட்டர்) வகையில் நடத்தப்பட்டது.
பெரியவர்கள் பிரிவில் 13 வயது முதல் 20 வயது வரை, 21 வயது முதல் 40 வயது வரை, 41 வயதுக்கு மேல் என மொத்தத்தில் 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. 4 பிரிவுகளுக்கும் தனித்தனியே முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வண்ணத்தில் பனியன்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படையினரும் பங்கேற்றனர் என ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்தார்.
சிங்கப்பெண் மாரத்தான் தலைவர் நல்லம்மை ராமநாதன், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுனர் அபிராமி ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.