தமிழக செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் அகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் குமரிக்கடல் மற்றும் இலங்கையுன் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.