தமிழக செய்திகள்

29-ந் தேதி தேரோட்டம்: ஆழித்தேரை அலங்கரிக்கும் குதிரை, யாழி பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

ஆழித்தேரின் முன்பு 4 குதிரைகள், ஒரு யாழி கம்பிரமாக காட்சியளித்து அழகுப்படுத்தும்.

திருவாரூர்,

தொன்மையான தலங்களில் திருவாரூர் தியாகராஜர் கோவில் முதன்மையானது. இந்த கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகும் விளங்குகிறது. ஆசியாவிலேயே மிக பெரிய தேராக ஆழித்தேர் என்கிற சிறப்புக்குரியது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதனை முன்னிட்டு ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும், அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. பிரமாண்டமான ஆழித்தேரின் முன்பு 4 குதிரைகள், ஒரு யாழி கம்பிரமாக காட்சியளித்து அழகுப்படுத்தும். இந்த குதிரை பொம்மைகள், யாழி கடந்த 2 ஆண்டுகள் புதிதாக தயாரிக்கப்பட்டது. மிகுந்த உயிரோட்டத்துடன், கலைநயத்துடன் தயாரான 4 குதிரை, ஒரு யாழி பொம்மைகளுக்கு வர்ணம் பூசி, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.