தமிழக செய்திகள்

"ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?" - அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்று 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவைத் தொடங்க உத்தரவிடக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் வித்யாரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் தமிழகம் ஆணவக் கொலைகள் இல்லாத மாநிலமாக மாறியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்