செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே பஞ்சர் போடும்போது லாரி டயர் வெடித்த விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள பம்மல் மூங்கில் ஏரி மசூதி தெருவைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது உறவினர் காதர் பாஷா என்பவருக்கு திருநீர்மலை சர்வீஸ் சாலையில் பஞ்சர் கடை உள்ளது. அங்கு அஷ்ரப் அலி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அஷ்ரப் அலி, லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அஷ்ரப் அலியின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அஷ்ரப் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.